லூதியானாவைச் சேர்ந்த சம்புரான் சிங் என்ற விவசாயி ஒரு ரயிலின் சொ்தக்காரராக இருக்கிறார். அவர் சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர். ரயில்வே துறையின் பெரிய தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீட்டில் அமர்ந்து கொண்டே அந்த ரயிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்கிறார் சம்புரான் சிங்.
சம்புரன் சிங் லூதியானாவின் கட்டான கிராமத்தில் வசித்து வருகிறார். 2007ஆம் ஆண்டு லூதியானா-சண்டிகர் ரயில் பாதை அமைக்கும் போது விவசாயிகளின் நிலத்தை ரயில்வே துறை கையகப்படுத்தியது. அப்போது ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் என்ற மதிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், அருகில் உள்ள கிராமத்தில் ஏக்கர் 71 லட்சம் ரூபாய் விலை போகும் பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் தான் சிக்கலே.
தனது நிலத்திற்கு குறைவான மதிப்பில் பணம் கொடுத்ததாக கூறி சம்பூரன் சிங், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழங்கிய முதல் உத்தரவில், இழப்பீட்டுத் தொகை 25 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தப்பட்டு, பின்னர் அதுவும் 1.47 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. முதல் மனு 2012ல் தாக்கல் செய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டுக்குள் வடக்கு ரயில்வேக்கு பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ரயில்வே வழங்கியது ரூ.42 லட்சம், ரூ.1.05 கோடி வழங்கப்படவில்லை. இவ்வளவு பெரிய தொகையை ரயில்வே துறையால் செலுத்த முடியவில்லை.
ரயில்வே நிர்வாகம் பணம் செலுத்தாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஜஸ்பால் வர்மா, லூதியானா நிலையத்திற்கு வரும் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். ரயில்வே நிர்வாகம் பணம் செலுத்தாத நிலையில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகமும் ஜப்தி செய்யப்பட இருந்தது. வழக்கறிஞர்களுடன் சம்பூரன் சிங் ரயில் நிலையத்திற்கு சென்ற போது ரயில் சிறைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அந்த ரயிலின் உரிமையாளராகிவிட்டார்.
இதன் மூலம் இந்தியாவில் ரயிலின் உரிமையாளராக இருக்கும் ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சம்பூரன் சிங் . ஆனால், நீதிமன்ற அதிகாரி மூலம் 5 நிமிடத்தில் ரயிலை விடுவித்தார்கள் ரயில்வே அதிகாரிகள். இந்த வழக்கும் இன்னும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
