சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது.
இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த பாதிப்புகளால், அந்த நாட்டில் பெரிய அளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயண கட்டுப்பாடுகளையும் விதிக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது.
எனினும், 140 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் இந்த எண்ணிக்கை மிக சிறிய விகிதத்திலேயே உள்ளது என கூறப்படுகிறது. சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு உலகிற்கு தெரிய வந்தது.
அதன்பின்னர் 225-க்கும் கூடுதலான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் உலக நாடுகள் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.
சீனாவில் நேற்று ஏற்பட்ட 29,390 என்ற கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது, ஏப்ரல் மத்தியில் பதிவான எண்ணிக்கைக்கும் கூடுதலாகும். பீஜிங் நகரில் சிறிய அளவில் பரவல் ஏற்பட்டாலும் கூட ஒட்டு மொத்த நகரமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சூழலும், நோயாளிகளை தனிமைப்படுத்துவதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும்.
இதுபோன்ற காரணங்களால் மக்கள் உணவு வாங்க அல்லது மருத்துவ உதவிகளை நாட இயலாமல் போராட கூடிய சூழல் ஏற்படும். அந்நாட்டில் 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை பரிதவிப்பில் ஆழ்த்தி உள்ளது. உலகின் 2-வது பொருளாதார நாடு என்ற பெருமையையுடைய சீனா, மீண்டும் கொரோனா பெருந்தொற்றுக்கு இலக்காகி உள்ளது.