தற்போது பிரிட்டன் நாட்டை பாதித்து வரும் கொரோனா வைரசின் புதிய திரிபான எக்ஸ்இ தொற்று முதன் முதலாக இந்தியாவின் மும்பை நகரில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா முந்தைய திரிபுகளைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம் பரவுக் கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது புதிதாக அறியப்பட்டுள்ள எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் கலப்பாகும்.
இப்போது வரை, ஒமைக்ரானின் பிஏ.2 தான் துணை மாறுபாடு கொண்ட கோவிட்-19 இன் மிகவும் தீவிரமான வைரசாக கருதப்பட்டது. எக்ஸ் இ தொடர்பான புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டு விட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கோவிட்-19 வகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவின் நான்காம் அலை ஏப்ரல் மாத இரண்டாம் பகுதியில் துவங்கும் என ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசாங்கமும் வரும் முன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறியப்படுகிறது.