தற்போது கத்தார் நாட்டில் உலகக் கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால், அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன்படி, மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகரித்து 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது தெரிய வந்துள்ளது.
பிபா உலகக்கோப்பை போட்டிக்காக கத்தாருக்கு விளையாட்டு சார் உடைகளை ஏற்றுமதி செய்து திருப்பூர் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள்,ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டு சார்ந்த உடைகள் சுமார் 17 சரக்கு தொகுப்புகள் கொச்சி விமான நிலையம் வாயிலாக கத்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் வாயிலாக ஆர்டர்களை பெற்று ஏற்றுமதி வழி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே திருப்பூர் ஜவுளித் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
