கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் இன்று முதல் அமலாகிறது.
கர்நாடக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் செயல்படும் பெங்களூரு பி.எம்.டி.சி, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். அரசு சொகுசு பேருந்துகளான குளிர்சாதன வசதி, படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகளைத் தவிர்த்து மற்ற அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இது காங்கிரஸ் அரசின் முதல் திட்டம் என்பதால், இதனை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூட்டாக செயல்பாட்டுக்கு அறிமுகம் செய்தனர்.
இந்த திட்டத்தின் தொடக்க விழா பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் கோலாகலமாக நடந்தது. இதற்கான ஏற்பாடுகளைக் கர்நாடக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் செய்தனர்.
