தமிழ்நாட்டின் மொழியான தமிழுக்கு என்றுமே தமிழகத்தை ஆளும் அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இருமொழிக் கொள்கையே பின்பற்றிவருகிறது தமிழக அரசு. அதாவது தாய்மொழி தமிழ் மற்றும் அன்னிய மொழி ஆங்கிலம் என இந்த இரண்டு மொழிகளே பிரதானமாக கற்பிக்கப்படுகிறது. மத்திய அரசுப் பள்ளிகளில் மற்றும் தனியார் பள்ளிகளிலேயே ஹிந்தி, பிரெஞ்சு என பிற மொழிகள் சேர்த்து முன்று மொழிகளாக கற்பிக்கப்படுகின்றன.
தற்போதைய தமிழக அரசு தமிழ் படித்தவருக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, தமிழ் படிக்கும் மாணவர்களுக்குச் சலுகைகள் என பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட அரசு குறிப்பில் பள்ளிகளில் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கையொப்பம் தமிழிலேயே இருக்க வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தியுள்ளது பள்ளிக் கல்வித்துறை.
அதுமட்டுமல்லாது இந்த ஆண்டுமுதல் +1 வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் தேர்வாகும் 1500 மாணர்களைத் தேர்ந்தெடுத்து மாதம் 1500 ரூபாய் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தனியார், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் பங்கக் கொள்ளலாம்.