மலேசிய மெட்ரோ அமைப்பில் 23 ஆண்டுகளில் முதல் முறையாக திங்களன்று தலைநகர் கோலாலம் பூரில் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களுக்கு அருகே நிலத்தடி சுரங்கப்பாதையில் இரண்டு மெட்ரோ லைட் ரயில்கள் மோதியதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகில் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறையில் ஒன்றாக மெட்ரோ ரயில் முறை அறியப்படுகிறது. இதனால் ஏற்படும் விபத்துகள் மிகக் குறைவு.இருப்பினும், மலேசியா நாட்டில் இரண்டு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
மே 24 ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் (1245ஜி.எம்.டி) பழுதுப் பார்க்கப்பட்ட பின்னர் காலியாக இருந்த ரயில்களில் ஒன்றும், அதே பாதையில் 213 பயணிகளை கொண்டு எதிர் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் நேருக்கு நேர் மோதியதாக மாவட்ட காவல்துறை தலைவர் மொஹமட் ஜைனஸ் அப்துல்லா கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 47 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், மேலும் 166 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு வெளியே உள்ள கே. எல். சி. சி நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் (330 அடி) தொலைவில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. நாங்கள் இன்னும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். ரயில்களின் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தவறான தகவல் தொடர்பு இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்றோம் என்று கூறினார்.