தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக சுங்க கட்டணத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. அதன்படி, தற்போது 28 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேலம் ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
கார்களுக்கான கட்டணம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு 78 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு 165 ரூபாயிலிருந்து 175 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிக சக்கரங்களை கொண்ட லாரிகளுக்கான கட்டணம், சக்கரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
