தீபாவளி பண்டிகையொட்டி கடைசி நாளான நேற்று துணி எடுக்கவும், பட்டாசு வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் கடைகளில் விற்பனை நேற்று களை கட்டியது.ஞாயிற்றுக்கிழமையான நேற்றுசென்னையில் தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடைகளுக்குப் படையெடுத்தனர்.
தியாகராய நகரில் நேற்று காலை முதலே பொருட்கள் வாங்குவதற்கும், துணிகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால் உஸ்மான் சாலை, பாண்டிபஜார், பனகல்பூங்கா, பர்கிட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவல் துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். அதேபோல், நகைகளையும் மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றதால், நகைக்கடைகளில் கூட்டம்அலைமோதியது. பெரிய கடைகளுக்குச் சற்றும் சளைக்காமல் சிறிய கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது.
சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில் பட்டாசுகள் விற்பனைபரபரப்பாக நடைபெற்றது. தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் பட்டாசுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம்காட்டினர். அங்கு அமைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட கடைகளில் 1000 வகைகளுக்கு மேலானபட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான பட்டாசு பெட்டிகளை மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த ஆண்டு குழந்தைகளுக்கு மட்டும் புதிதாக ஆயிரம் வகையான பட்டாசுகள் வந்துள்ளன. 100 சதவீதம் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன” என்றனர்.
