காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2வது விமான நிலையமான, பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலம் எடுப்பு பணிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினர்.
500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணியில் பங்கேற்றவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டம் இன்றுடன் 200 நாட்களை எட்டியது. இந்த 200வது நாள் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பேசினார். இதனால் சட்டம்- ஒழுங்கு காக்க எஸ்பி சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி, 28 டிஎஸ்பி, 42 இன்ஸ்பெக்டர்கள், 81 எஸ்ஐகள் உள்ளிட்ட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.