காங்கிரஸ் எம்பியும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரா என்ற நடைப் பயணத்தை இன்று கன்னியாகுமாரியில் தொடங்கினார். அதாவது இந்தியாவின் ஒற்றுமைப் பயணம் என்று இதற்கு பொருளாகும். இந்தியாவை ஒன்று சேர்க்கும் வகையில் இப்பயணம் இருக்குமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு இந்தியப் பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்த காங்கிரஸ் பின்னர் மாநிலங்களிலும் ஆட்சியைப் பறிகொடுக்க ஆரம்பித்தது. காங்கிரஸ் மெல்ல தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கி 2019ம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் பரிதாபமாய் தோல்வியடைந்தது. இதன் பின் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மெல்ல வாஷ்அவுட் ஆக ஆரம்பித்தது.
இழந்த செல்வாக்கை மீட்கும் பொருட்டு, மக்களின் செல்வாக்கை மீண்டும் அடையும் திட்டத்தில் இந்த நடைப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைப் பயணத்தை தொடங்க இன்று கன்னியாகுமாரி வந்தார் ராகுல் காந்தி. அதற்கு முன்னார் டில்லியில் இருந்து விமானம் மூலம் வந்த ராகுல் காந்தி தன் தந்தை நினைவிடமான ஸ்ரீபெரும்புதூர் சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் கன்னியாகுமாரி புறப்பட்ட அவர் விவேகானந்தர் பாறைக்கு சென்று விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தியப் பின் காந்தி மண்டபம் சென்று அங்கிருந்து தன் நடைப் பயணத்தை துவக்குறார். திமுக தலைவர் ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து இப்பயணத்தை ஆரம்பித்து வைக்கிறார்.
முதல் நாள் 600 மீட்டர் நடைப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி பின்னர் ஓய்வெடுத்தப் பின் நாளை திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து நடைப்பயணம் கர்நாடகா, ஆந்திரா,மஹராஷ்ட்ரா என்று அனைத்து மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக தனிவசதிகளுடன் கேரவன் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக கிட்டத்தட்ட 150 நாட்கள் 3000கி.மீ நடைபெறும். இப்பயணம் முடியும் போது மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஒருமனதாக ஆதரவளிப்பார்கள் என்று ராகுல் காந்தி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.