உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து மியாட் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.
