தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு என்னவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கும் திட்டம்தான்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலான நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர்.
இதனிடையே, ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி வரும் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். நாளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.