ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க விமானப்படையின் அபாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், அதில் இருந்த இரண்டு பைலட்டுகளை உயிருடன் மீட்ட ட்ரோன் படகின் உருவாக்கத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் முக்கிய பங்காற்றியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.தகவல்களின்படி, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டர் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் கடலில் குதித்து உயிர் தப்பினர்.இதையடுத்து அமெரிக்க கடற்படை பயன்படுத்திய “கார்சேர்” என்ற நவீன ட்ரோன் படகு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சுமார் இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு அந்த ட்ரோன் படகு இரு பைலட்டுகளையும் பாதுகாப்பாக மீட்டது.24 அடி நீளமுள்ள இந்த ட்ரோன் படகு ரிமோட் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்குகிறது. மணிக்கு 35 நாட்டிக்கல் மைல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த படகு, சுமார் 1,000 நாட்டிக்கல் மைல் தூரம் செல்லக்கூடியது. மேலும் 1,000 பவுண்ட் வரை எடையை சுமக்கும் திறனும் இதற்கு உள்ளது.இந்த அதிநவீன ட்ரோன் படகை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் செயல்படும் சரோனிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான இந்திய வம்சாவளி பொறியாளர் வைபவ் அல்டேகர் இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள வைபவ், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கடல்சார் ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய கடற்படைக்காக உருவாக்கப்பட்ட ட்ரோன் நீர்மூழ்கி திட்டத்திலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.மனித உயிர்களை ஆபத்தின்றி காப்பாற்றும் வகையில் ட்ரோன் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீட்பு நடவடிக்கையில் இந்த ட்ரோன் படகின் வெற்றி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

