இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வரும் அவர், மே 30-ம் தேதி பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறுவதையடுத்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் சுமார் 39 ஆண்டுகள் பணியாற்றிய ராஜா சுப்ரமணிக்கு, மேற்கு மற்றும் வடக்கு எல்லை பாதுகாப்பு குறித்து அதிக அனுபவம் உள்ளது. மேலும் லக்னோவில் உள்ள மத்திய ராணுவ கட்டளையின் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.இதனுடன், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் மே 31-ம் தேதி பொறுப்பேற்கிறார். தற்போதைய தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதிக்கு பிறகு அவர் இந்த பதவியை ஏற்கவுள்ளார். 1987-ல் கடற்படையில் சேர்ந்த அவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட முக்கிய போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கிய அனுபவமும் அவருக்கு உள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கிய மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த இரு அதிகாரிகளின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

