ஆம்னி பேருந்துகள் கட்டாயமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் முறையாக பெறப்படவில்லை என்று சுட்டிக்காட்டியது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறைகளின்படி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெற கட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.இந்த தீர்ப்பு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்த பிறகே அதனை முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

