அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில், நுகர்வோருக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் முன்புற லேபிள்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி ராஜிவ் சங்கர் திவேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு இருப்பதை நுகர்வோர் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை வாசகங்கள் கொண்ட லேபிள்களை அறிமுகப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI-க்கு உத்தரவிட்டனர்.கடந்த 13ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை செயல்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை அறிவிப்புகளை இடம்பெறச் செய்வதில் என்ன தயக்கம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கும் வகையில் FSSAI தனது நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரம் மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

