வங்கதேசத்தில் பாதுகாப்பு நிலை: இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைவங்கதேசத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா தனது தூதரக அதிகாரிகளுக்கான பணியிடத்தை non-family posting ஆக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வங்கதேசத்தில் பணியாற்றும் இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரை தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வங்கதேசத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் மதக்கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள், குறிப்பாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. இந்த சூழலில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்தியாவின் ஐந்து தூதரக அலுவலகங்களும் வழக்கம்போல முழு திறனுடன் செயல்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. சட்டோகிராம், குல்னா, ராஜ்ஷாஹி, சில்ஹெட் ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்களும், டாக்காவில் உள்ள உயர் ஆணையகமும் தொடர்ந்து இயங்கும். தூதரக அதிகாரிகளின் குடும்பங்கள் எப்போது மீண்டும் திரும்புவார்கள் என்பது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களால், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.ஆகஸ்ட் 2024-ல் வங்கதேசத்தில் இடைக்கால நிர்வாகம் பதவியேற்றதிலிருந்து, இந்தியா–வங்கதேச உறவுகள் முன்பைவிட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் டாக்காவில் உள்ள இரு நாடுகளின் தூதரகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சட்டோகிராமில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே வன்முறைப் போராட்டங்கள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

