‘தி போர்டு ஆஃப் பீஸ்’ – புதிய சர்வதேச அமைப்புஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காசா நகரை மறுசீரமைப்பதற்காக ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் தலைவராக ட்ரம்ப் தானே பொறுப்பேற்றுள்ளார்.இந்த அமைப்பில் இணைவதற்காக இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் மாளிகை அழைப்பு அனுப்பியுள்ளது. இந்த அமைப்பு ஆட்சித் திறன் மேம்பாடு, பிராந்திய உறவுகள், மறுசீரமைப்பு பணிகள், முதலீடுகளை ஈர்ப்பது, பெரிய அளவிலான நிதி மற்றும் மூலதனத்தை திரட்டுவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.உலகளாவிய மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த அமைப்பு ஒரு புதிய மற்றும் துணிச்சலான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.இந்த அமைப்பில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, ட்ரம்பின் சிறப்பு பேச்சுவார்த்தையாளர் ஸ்டீவ் விட்காஃப், அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க கோடீஸ்வரர் மார்க் ரோவன், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ராபர்ட் கேப்ரியல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.ஆதரவு தெரிவித்த நாடுகள்இந்த அமைப்பில் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் இணைந்துள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மொராக்கோ, வியட்நாம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கனடா அமைப்பில் சேரும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தாலும், நிரந்தர உறுப்பினர் பதவிக்கான 1 பில்லியன் டாலர் கட்டணத்தை செலுத்தமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.கவலை மற்றும் மறுப்பு தெரிவித்த நாடுகள்ரஷ்யாவின் பங்கேற்பு குறித்து உக்ரைனும், பிரிட்டனும் கவலை தெரிவித்துள்ளன. சீனாவும், இந்தியாவும் தங்களின் பங்கேற்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த அமைப்பு சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என கூறி நார்வே இதில் சேர மறுத்துள்ளது. அதேபோல் பிரான்ஸும் இந்த அமைப்பில் இணைய மறுத்துவிட்டது.

