இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த ரயிலின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக, கடந்த மாதம் இந்திய ரயில்வே இறுதிக்கட்ட சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அவசரகால பிரேக்கிங் தூரம், ரயிலின் ஸ்திரத்தன்மை மற்றும் ஊசலாட்ட சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.’கிரீன் டிரான்ஸ்போர்ட்டேஷன் மிஷன்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் ரயில், இந்தியாவின் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து முயற்சிகளில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.ஹரியானா மாநிலத்தில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்று இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக, ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையிலான 89 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடத்தில் இந்த ரயில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.இந்த வழித்தடத்தில் 4 முதல் 5 ரயில் நிலையங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. பொதுமக்கள் எளிதில் பயணிக்கக்கூடிய வகையில் டிக்கெட் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

