பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தல் அமைதியாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என கூறினார். பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு வரும் வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளாக 17 புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட உள்ளது. அதில் வயதானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். வேட்பாளர்களின் படங்கள் வண்ணப்புகைப்படங்களாக இடம்பெற உள்ளன. தேர்தலுக்கு அனைத்து பூத் ஏஜென்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு திருத்தம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. பீகார் தேர்தலை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகள் பீகாரில் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வைக்க வாக்குச்சாவடிக்கு வெளியே சிறப்பு ஏற்பாடு. ஒப்புகைச்சீட்டில் சீரியல் நம்பர் மற்றும் இதர விவரங்கள் தெளிவாக அடையாளம் காணும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளை பெற சிறப்பு செயலி அறிமுகம் ஆகிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
