ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்காக துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்னுலின் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் சாத்தியமானால், ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலப்பரப்பு வழியாக நேரடி சரக்கு ரயில் போக்குவரத்து உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போக்குவரத்து மேலும் எளிதாகவும் வேகமாகவும் மாறக்கூடும்.
ரஷ்யாவின் கட்டுமானத் துறை ஆண்டுக்கு மேலும் ஒரு டிரில்லியன் ரூபிள் அளவிலான நிதியை கையாளும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நிதி ஆதரவு கிடைத்தால், ரஷ்யாவின் கட்டுமானத் திறனை மேலும் விரிவுபடுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

