2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 19) அறிவித்தார். இதன் மூலம் இரு கட்சிகளுக்கிடையிலான கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இதுவரை தெளிவாக அறிவிக்காமல் இருந்தது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைப்பதை தேமுதிக இன்று உறுதி செய்துள்ளது.இதற்கான ஆலோசனைக்காக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷும் கலந்துகொண்டார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர். இந்த கூட்டணி 2026 தேர்தலில் முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

