அமெரிக்கா மற்றும் ஈரான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன. இரண்டு வாரங்களில் புதிய திட்டத்துடன் மீண்டும் கலந்துரையாட தெஹ்ரான் அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.நேற்று (18-02-2026) ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என்றும் கூறினர். இந்த மாத தொடக்கத்தில் மஸ்கட்டில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை விட ஜெனீவாவில் நடந்த இந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்தார். அணுசக்தி திட்டம் தொடர்பான ஒரு சாத்தியமான ஒப்பந்தத்திற்கான வழிகாட்டும் கொள்கைகளில் இரு தரப்பும் உடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதற்கிடையில், அமெரிக்கா ஈரானுக்கு அருகில் தனது இராணுவ வலிமையை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் F-35, F-22 மற்றும் F-16 உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மேற்கு ஆசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், கடந்த மாத இறுதியில் USS Abraham Lincoln என்ற விமானம் தாங்கி கப்பலை அரபிக் கடலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.அதன் பின்னர், பிப்ரவரி முதல் வாரத்தில் F-15 போர் விமானங்கள், MQ-9 ரீப்பர் ட்ரோன் மற்றும் A-10C தண்டர்போல்ட் II தாக்குதல் விமானங்கள் ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி விமான தளத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் அந்நாட்டில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பேச்சுவார்த்தையும், இராணுவ முன்னெச்சரிக்கையும் ஒரே நேரத்தில் நடைபெறுவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

