கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தூத்துகுடியில் இருந்து 6 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். மேலும் இங்கு தனியார் விடுதியில் தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு வந்துள்ளனர். அப்போது பாறையின் நுனி பகுதியில் இருந்து சுற்றுலா தலத்தை பார்க்கும்போது கால் தவறி 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து உடன் வந்த நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அடிப்படையில் வந்த தீயணைப்பு துறையினர் 100 அடி பள்ளத்தில் இறங்கி படுகாயங்களுடன் வலியில் தவித்து வந்த தன்ராஜ் (22) என்ற இளைஞரை மீட்டு பள்ளத்தில் இருந்து மேற்புற பகுதிக்கு சுமார் 1 மணி நேரமாக போராடி தீயணைப்பு துறையினர் அழைத்து வந்தனர்.

