எகிப்து பிரமிடுகளில் 2,000 ஆண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு. எகிப்தின் புகழ்பெற்ற பிரமிடு கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறை கல்லறைகளில் இந்த கல்வெட்டுகள் காணப்பட்டுள்ளன.சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் மொத்தம் 30 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அவற்றில் 20 தமிழ் மொழியிலும், 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியிலும் உள்ளன என்று தெரியவந்துள்ளது.இந்த கல்வெட்டுகள், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே வணிகத் தொடர்பு இருந்ததற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகின்றன. கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் 3ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வணிகர்கள் எகிப்துக்குச் சென்று மசாலா பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்துள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எகிப்தின் பண்டைய தலைநகரான தீபஸில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கிற்கும் சென்றுள்ளனர்.தமிழ்நாடு தொல்பொருள் துறை நடத்திய சர்வதேச தமிழ் கல்வெட்டு மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்சைச் சேர்ந்த பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் ஆகியோர் இந்த தகவலை வெளியிட்டனர்.கல்வெட்டுகளில் ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர் 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை காணப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் “சிகை கொற்றன் – வர கண்ட” (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என்று பொறிக்கப்பட்டுள்ளது.ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று அங்கிருந்து உள்நாட்டு பகுதிகளுக்கும் பயணம் செய்ததற்கான முதல் நேரடி ஆதாரம் இதுவாக கருதப்படுகிறது.

