அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு போர் ஆதரவு விமானம் ஈராக்கில் கீழே விழுந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் KC-135 ரக ஸ்டிராடோடாங்கர் விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் விமானி, துணை விமானி உள்ளிட்ட மொத்தம் 6 வீரர்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மற்றவர்களின் நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களை தடுக்க அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற ராணுவ நடவடிக்கையை கடந்த பிப்ரவரி 28 முதல் மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கையின் பின்னணியில் பல போர் விமானங்கள் அந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த விபத்து எதிரி தாக்குதலால் ஏற்பட்டதல்ல என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்லது வான்வெளியில் ஏற்பட்ட விபத்து காரணமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

