ஏ.டி.எம்., மற்றும் யு.பி.ஐ. மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இனி பின் நம்பர் அவசியமில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.டி.எம், மற்றும் யு.பி.ஐ.யில் முக அடையாளம் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. முக அடையாள சரிபார்ப்பு முறையை வங்கி மற்றும் நிதித் துறைகளில் செயல்படுத்த ஆதார் முகமை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் பின் நம்பர் மூலம் நிதி மோசடிகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் மோசடிகளை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பின் நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனர்கள் இனி பின் நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

