அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள், புதிய வேலை தேடுவதற்காக தற்போது வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய விதியை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாத விசாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தால், புதிய வேலை தேடுவதற்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, வேலை முடிவடைந்தவுடன் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தும் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது.அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டம், தற்போது கூட்டாட்சி நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட சில விசா பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் வழங்கப்படும் 60 நாள் அவகாசம் நீக்கப்படலாம்.இதனால், விசா காலம் முடிவடையாமல் இருந்தாலும் வேலை முடிவுக்கு வந்தால், புதிய வேலை தேடுவதற்காக அமெரிக்காவில் தங்க முடியாத சூழல் ஏற்படலாம். அவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகும்.மேலும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (USCIS) விசா நிலை தொடர்பான விதிமீறலை மன்னிக்காத பட்சத்தில், அமெரிக்காவிற்குள்ளேயே விசா நிலையை மாற்றுவது அல்லது புதிய வேலை வழங்குநரிடம் மாறுவது கடினமாகலாம்.இந்த புதிய விதி நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வேலை இழக்கும் நிலையில் உள்ளவர்கள் குறுகிய காலத்திற்குள் அடுத்த வேலை அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம்.

