அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக-வை ஒன்றிணைக்க செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அதிமுக ஒன்றுபட வேண்டுமென கோரிக்கையை முன் வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பரப்புரை பயணத்திற்காக திண்டுக்கல்லில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள தனியார் ஹோட்டலில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வரும் அனைவரும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபிறகே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளா். அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

