இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களில் 39 சதவீதம் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பானவை என தெரியவந்துள்ளது.பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் புகார்களை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டில் மொத்தமாக 27,672 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை தொடர்பான புகார்கள் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முந்தைய 2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 25,743 ஆக இருந்தது. அதேபோல், குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் 2024ஆம் ஆண்டில் 6,237 ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அது 6,860 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் வரதட்சணை தொடர்பான புகார்கள் 2024ஆம் ஆண்டில் 4,383 ஆக இருந்தது; 2025ஆம் ஆண்டில் அது 3,986 ஆக குறைந்துள்ளது.இதற்கிடையில், பணியிடங்களிலும் இணையதளங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் தீவிர நடவடிக்கைகள் தேவை எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

