கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு :இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் அறிவிப்பு. இந்தி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மராட்டிய மாநில அரசு இரு மொழிக் கொள்கையை தொடரும் என்று அறிவித்துள்ளது. மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை 2020ன் அடிப்படையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை மராட்டியம் மற்றும் ஆங்கில வழி கல்வி பள்ளிகளில் 3வது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிராக உத்தவ் தாக்கரே, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. 3வது மொழியாக இந்தி மொழி சேர்க்கப்பட்டு இருப்பது கல்வி ரீதியாக நியாயமற்றது என்றும் இது மாணவர்களின் உளவியல் நலனுக்கு ஏற்றது அல்ல என்றும் மராட்டிய மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மராட்டியத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே உள்ள மராட்டி, ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

