திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலின்படி கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.140.29 கோடியை செலுத்தியுள்ளனர்.மேலும், ஜூலை மாதத்தில் 5 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜூலை 16-ம் தேதி ஒரே நாளில் ரூ.5.31 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதேபோல், 10.58 லட்சம் பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.விடுமுறை நாட்கள், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களின் வருகை மற்றும் கோயில் வருமானம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

