BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC) ஒன்றிணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியுள்ளது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த யோசனையை, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள BRICS உச்சி மாநாட்டின் முக்கிய அஜெண்டாவாக சேர்க்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த 2022 டிசம்பரில் ரிசர்வ் வங்கி “இ-ரூபி” என்ற டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இதுவரை சுமார் 70 லட்சம் பேர் இ-ரூபியை பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண ரூபாயும், இ-ரூபியும் ஒரே மதிப்புடையவை. இ-ரூபி நேரடியாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சர்வதேச சந்தை மாற்றங்கள் அதனை பாதிக்காது.BRICS உறுப்புநாடுகளும் தங்களது டிஜிட்டல் நாணயங்களை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக சீனா, டிஜிட்டல் யுவானை உலகளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் BRICS அமைப்பில் உள்ளன.இந்த ஆண்டு BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில், BRICS நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இது அமெரிக்க டாலர் சார்பை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

