மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சரேய்கோங் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த டாங்குள் கிராம மக்கள் பாதுகாப்பு தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.மணிப்பூரில் பாஜக அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர் வன்முறை சம்பவங்கள் நடந்துவருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குக்கி மற்றும் மெய்த்தி சமூகங்களுக்கிடையிலான நீடித்த மோதல் காரணமாக பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வன்முறையில் மட்டும் 9 முதல் 10 வீடுகள் தீக்கிரையானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மாநிலத்தின் பல பகுதிகளில் சுமார் 30 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

