பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மெல்ல மெல்ல வலுவடைந்து புயலாக உருமாறியது. வங்கதேசம் வழங்கிய ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது குஜராத்தின் சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்று (வியாழக்கிழமை) பிற்பகலில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவித்த நிலையில் சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கி நள்ளிரவு 11.30 மணி வரை பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. ஜக்காவு துறைமுகத்திற்கு 140கிமீ மேற்கு-தென்மேற்கில் மிக தீவிர புயல் பிபோர்ஜாய் தற்போது மையம் கொண்டுள்ளது.
கடந்த 6மணி நேரத்தில் மணிக்கு 8கிமீ வேகத்தில் நகர்கிறது பிபோர்ஜாய் புயல் மிகத்தீவிர புயலாக கரையை கடக்கும் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. புயல் காரணமாக குஜராத் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

