சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை ராணுவ விமானம் சென்ற நிலையில் திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இந்த விபத்தில் 46 பேர் வருத்தகரமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவசரகால மீட்புப் படையினர் காயமடைந்த பொதுமக்களை, குழந்தைகள் உட்பட, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக, பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், மின்சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டத் தகவல்களின்படி, இந்த விபத்தில் சூடான் ராணுவ மேஜர் ஜெனரல் பஹர் அகமது உள்பட 46 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சூடான் நாட்டில் கடந்த 2023 ஆண்டு முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

