தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. அதன் புரோமோ வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் வீட்டில் தங்கியிருப்பார்கள். அதில் வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது, அதன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார், அந்த முடிவை மக்களும் கொண்டாடினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
2017ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, தொடர்ந்து பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. தமிழில் கடைசியாக 8வது சீசன் வரை ஒளிபரப்பானது, இந்த வருட ஜனவரி மாதம் தான் முடிவுக்கு வந்தது.
தற்போது ஒன்பதாவது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்குகிறார். இது தொடர்பான புரோமோ வெளியாகியிருக்கிறது. புரோமோவில் விஜய் சேதுபதி எதுவும் பேசவில்லை. மாறாக ஷோபாவில் மாஸாக தோன்றியிருக்கிறார். விரைவில் மற்ற விவரங்கள் வெளியாகலாம் என்று அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜியோஸ்டார் Head of Cluster, Entertainment (South) கிருஷ்ணன் குட்டி அளித்த பேட்டியில், “இந்த முறை சில சமூக ஊடக பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்னர் நெல்சன் பிரதீப் குமார், அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற பிரபல இயக்குநர்கள் நிகழ்ச்சியை இயக்கிய நிலையில், இந்த சீசனை பிரவீன் மற்றும் அர்ஜூன் இயக்க உள்ளனர்.
மேலும், ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள், நேரடியாக போட்டியாளர்கள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். வரவிருக்கும் ஒன்பதாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு சீசனிலும் புதுமை கொண்டு வரும் பிக்பாஸ், இந்த முறை எந்த வகை மாற்றங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கப் போகிறது என்ற ஆர்வம் அனைவரிடமும் நிலவுகிறது.

