சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வில் முதன் முறையாக 20 ஆயிரத்து 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டயக்கணக்காளருக்கான இடைநிலை மற்றும் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில், மத்திய குரூப்-1 சி.ஏ.இறுதித் தேர்வை 74 ஆயிரத்து 877 பேர் எழுதிய நிலையில், 20 ஆயிரத்து 479 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதே போன்று 58 ஆயிரத்து 891 பேர் எழுதிய சிஏ குரூப்-2 இறுதி தேர்வில், 21 ஆயிரத்து 408 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
சிஏ குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வை ஒன்றாக எழுதிய 35 ஆயிரத்து 819 பேரில், 7 ஆயிரத்து 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம், சிஏ இறுதி தேர்வில் முதன் முறையாக ஒரே நேரத்தில், 20 ஆயிரத்து 446 பேர் வெற்றி பெற்று, பட்டயக் கணக்காளராகி உள்ளனர். இதில் டெல்லியை சேர்ந்த ஷிவம் மிஸ்ரா 83.33 சதவிகித மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து, டெல்லியை சேர்ந்த வர்ஷா அரோரா, 80 சதவிகித மதிப்பெண்களுடன் 2 ஆம் இடத்தை பிடித்தார்.
மும்பையை சேர்ந்த கிரண் ராஜேந்திர சிங், கில்மான் சாலிம் அன்சாரி ஆகியோர் தலா 79.50 சதவிகித மதிப்பெண் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தனர்.

