மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பூச்சோங்கில், புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாயின் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49 பேர் அருகிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 63 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு தீக்காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சில வீடுகள் தீயில் எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வாழும் மக்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதற்கிடையில், எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட தீயின் காணொளி சமூக வலைதளங்களில் விரைவாக பரவி வருகிறது.

