சென்னை – கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது, 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 7 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் பூர்விகா நிறுவனம் செயல்பட்டு வருகிறது, மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதன் கிளைகள் உள்ளன.மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. சோதனையின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வருமான வரித்துறை சோதனைக்கு மேலும் விரிவாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு தான் வரி எய்ப்பு நடந்ததா என்றும் எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பதற்கான விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

