மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட, இறையாண்மையுள்ள சுதந்திரமான பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே ஒரே தீர்வு என இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெளிவாக தெரிவித்துள்ளது.பாலஸ்தீன விவகாரம் தொடர்பான திறந்த விவாதத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், “காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமாகவே நிலையான அமைதி கிடைக்கும்” என்றார்.அவர் மேலும் கூறுகையில், இந்தியா பயங்கரவாதத்தை கண்டிக்கிறது என்றும், அப்பாவி மக்களின் துயரத்துக்கு முடிவு வர வேண்டும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அதேபோல், இஸ்ரேலுடன் அருகருகே அமைதியாக வாழும் சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.இதுவரை இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு 170 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை, அதில் 135 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை, வழங்கியுள்ளது. மேலும், லெபனான், சிரியா, ஏமன் போன்ற நாடுகளிலும் அமைதி திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புகிறது என கூறினார் .

