தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கிடைக்காத காரணத்தால் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ள தயாரிப்பு தரப்பு, புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தாமதம் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளதை புரிந்து கொள்வதாகவும், அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் படத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் என திரையரங்குகள் அறிவித்துள்ளன. ராம் சினிமாஸ் வெளியிட்ட அறிவிப்பில், ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு தானாகவே அவர்கள் செலுத்திய அசல் கட்டண முறைக்கு பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும், கவுண்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் நேரில் சென்று பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பொறுமையுடன் புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு திரையரங்க நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

