திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்வில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டின் மாசித் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதி உலா வந்தனர். ஏழாம் மற்றும் எட்டாம் திருவிழாக்களில் சுவாமி சண்முகர் தங்கச் சப்பரம், வெள்ளிச் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோயிலுக்கு திரும்பினார்.ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் தெய்வானை அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. காலை பிள்ளையார் தேர் புறப்பட்டதையடுத்து, பெரிய தேரில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் நான்கு ரத வீதிகள் வழியாக வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

