ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணம் செய்வோருக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. வந்தே பாரத் ரயில்களிலும் பலர் விதிமுறைகளை மீறி பயணம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அனைத்து மேலாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கடந்த சில நாட்களாக Rail MADAD இணையதளத்தில் முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் சிறப்புக் குழுவை அமைக்க மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், முன்பதிவு பெட்டிகளில் அனுமதியின்றி பயணம் செய்வோர் குறித்த புகார் எழுந்த 10 சிறப்பு ரயில்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் அல்லது உரிய பயணச்சீட்டு இல்லாத நபர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன், அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் உள்ள வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மற்ற விதி மீறல்களை குறைப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தியுள்ளது.

