பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டிக்கு தமிழ்நாட்டின் நேத்ரா குமணன் தகுதிபெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், பாய்மரப் படகுப் போட்டிக்கான, இறுதிச்சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையான நேத்ரா குமணன் களமிறங்கினார். இதில் 67 புள்ளிகள் பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்த நேத்ரா, ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார்.
இதன்மூலம், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது போட்டியாளராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு, டோக்கியோ ஒலிம்பிக்கில் நேத்ரா குமணன் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நேத்ரா குமணனுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்து 500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

