உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் முக்கியமான கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுவாக விமான விபத்துகளின் போது, அதற்கான காரணத்தை அறிவதில் கருப்புப் பெட்டியின் பங்கு மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டேவின் வாரன் என்பவர் கண்டுபிடித்த இந்த கருப்புப் பெட்டி, விமானத்தின் வாள் பகுதியில் அமைந்து இருக்கும். அதில் விமானிகள் மற்றும் ஊழியர்களின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், பறந்த உயரம், அப்போதைய காலநிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவாகியிருக்கும். அதை வைத்தே பெரும்பாலான விமான விபத்துகள் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவரும். தீப்பற்றினாலும் பாதிக்காத வகையில் டைட்டானியம் மற்றும் உலோகங்களால் கருப்புப் பெட்டி வடிவமைக்கப்படும். மேலும் கடுமையான அழுத்தம் மற்றும் மோதலை தாங்கக்கூடியவை. இந்நிலையில் அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10 -15 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே அகமதாபாத் விமான விபத்திற்கான சரியான காரணம் தெரியவரும். இதனிடையே விமான விபத்தில் 241 உயிரிழந்துள்ளனர். 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 37 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிரதமர் நரேந்திர மோடி , குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்று விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் விமான விபத்தில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

