நாடு முழுவதும் வெங்கடேச பெருமாள் கோவில்கள் இருந்தாலும் பக்தர்கள் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்நாளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் திருப்பதி திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
விஐபி தரிசனம், கட்டண தரிசனம் உட்பட பல்வேறு சிறப்பு தரிசனங்களுக்கும் அனுமதி அளித்து வருகிறது. ஏழுமலையானின் ஆர்ஜித சேவைகள் உட்பட பல்வேறு சேவைகளில் பக்தர்கள் பங்கேற்கவும் தேவஸ்தானம் வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானின் கல்யாண உத்சவத்தை காண தேவஸ்தான நிர்வாகம் சூப்பர் வாய்ப்பை கொடுத்துள்ளது.
அதன்படி ஏழுமலையானின் கல்யாண உத்சவத்தில் புதுமண தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. புதுமணத் தம்பதிகள் திருமலைக்கு வந்து ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றால், சகல சுகங்களும், திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் திருமஞ்சன சேவையில் கலந்து கொள்ள பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகளை ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு டிக்கெட்டும் 1000 ரூபாய் ஆகும். இந்த டிக்கெட்டுகள் திருமண விழாக்கள் மற்றும் பிரத்யேக தரிசனம் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தலாம். இந்த டிக்கெட்டைப் பெறுவதற்கு சில விதிமுறைகளை உள்ளன.
புதுமணத் தம்பதிகள் முதலில் CRO அலுவலகத்தில் உள்ள ஆர்ஜிதா சேவா லக்கி டிப் கவுண்டருக்குச் செல்ல வேண்டும்.அங்கு புதுமண தம்பதிகள் தங்களின் திருமண புகைப்படம் மற்றும் ஆதார் காடுகளை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த சிறப்பு சேவையை பெற புதுமணத் தம்பதிகள் திருமணம் செய்து ஒரு வாரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த புதுமணத் தம்பதிகள் நேரடியாக கல்யாணோத்ஸவ டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே தம்பதியினர் ஒன்றாக கலந்து கொள்ளும் சிறப்பு ஹோம பூஜைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அலிபிரியில் ஹோ மந்திர யாகசாலை கட்டிடம் உள்ளது. இங்கு வரும் 23ஆம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு ஹோமம் தொடங்க உள்ளது. இந்த சிறப்பு ஹோமத்தில் கணவன் மனைவி தம்பதியாக பங்கேற்றால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தலா 1000 ரூபாய் செலுத்தி டிக்கெட்டுகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெற்று கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

