தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கார்லா மண்டலத்தை சேர்ந்த கடியால பாவனா (24) மற்றும் புல்லகண்டம் மேகனா ராணி (25) ஆகிய இருவரும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக அமெரிக்கா சென்றனர். படிப்பு முடிந்த பிறகு, அங்கே வேலை தேடி வந்தனர். காலப்போக்கில் நெருங்கிய தோழிகளாக மாறிய அவர்கள், நண்பர்கள் எட்டு பேருடன் இரண்டு கார்களில் கலிபோர்னியாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.இந்த சுற்றுலா பயணத்தின் போது, அவர்கள் சென்ற கார் அலபாமா மாநிலத்தில் உள்ள மலைப்பகுதி சாலையில் ஒரு வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பாவனா மற்றும் மேகனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அமெரிக்க போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இந்த விபத்து பற்றிய தகவல், அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.இதனிடையே, கலிபோர்னியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விபத்துக்கான சரியான காரணத்தை விசாரித்து வருகின்றனர். அதே சமயம், அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு புலம்பெயர் சமூகத்தினரும், இருவரின் உடல்களை தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

