மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேற்காசிய போர் தொடங்கிய பின்னர் இரு தலைவர்களும் மேற்கொண்ட முதல் நேரடி பேச்சுவார்த்தை இது என்பதால், இந்த உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தற்போதைய பாதுகாப்பு நிலை, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இருவரும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், அது மூடப்பட்டிருப்பது பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இதனால் எண்ணெய் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நீரிணையை விரைவில் திறக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மேற்காசிய பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக தூதரக மட்டத்தில் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

